ஜோகூர் பாரு, ஏப் 30 – நாடு முழுவதிலும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குறைந்தது 1,483 வேலை வாய்ப்புக்கள் பூர்த்தி செய்யப்படும் என தீயணைப்பு மீட்புத்துறை நம்பிக்கை கொண்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பயிற்சி நிலையங்களில் இரண்டு கட்டங்களாக குறைந்தது 500 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் தலைமை
இயக்குநர் டத்தோ Nor Hisham Mohammad தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள எங்களது 338 தீயணைப்பு நிலையங்களிலும் போதுமான மனித ஆற்றல் இருப்பதை உறுதிப்படுத்த மேலும் இரண்டு முறை தீயணைப்பு துறைக்கான பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அவர் கூறினார்.
175 தீயணைப்பு வீரர்கள் மற்றும் உதவி தீயணைப்பு வீரர்களுக்கு சிறந்த மற்றும் நீண்ட கால சேவைக்கான விருதுகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசியபோது Nor Hisham இத்தகவலை வெளியிட்டார். தற்போது நாடு முழுவதிலும் 13,000 உறுப்பினர்களை தீயணைப்பு மீட்புத்துறை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.