ஈப்போ, பிப் 13 – இன்று அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் ஈப்போ பாசீர் பூத்தே மார்க்கெட் 90 விழுக்காடு அழிந்தது. இன்று அதிகாலை மணி 12.20 அளவில் இந்த தீ விபத்து குறித்த செய்தியை தாம் அறிந்ததாக ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹோவர்ட் லீ தெரிவித்தார். மேல் விவரங்களை அறிந்து கொள்வதற்காக சட்டமன்ற உறுப்பினர் கோ சீ ஹுவா மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர் ஜெய்டன் லிம் ஆகியோருடன் சேர்ந்து தாமும் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றதாக அவர் கூறினார்.
அதிகாலை 12.35 அளவில் தாம் அங்கு சென்றடைந்தபோது 80 விழுக்காடு மார்க்கெட் அழிந்துவிட்டதோடு தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்கள் மும்மூரமாக ஈடுபட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 9 தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 60 தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வ தீயணைப்பாளர்களும் இரண்டு மணி நேரத்திற்கு பின் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அதிகாலை மணி 1.50 அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. சீன புத்தாண்டு காலத்தில் சுமர் 60 வர்த்தகர்கள் தங்களது கையிருப்புக்களை வாங்கி வைத்திருந்ததால் இந்த தீவிபத்து அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஹோவர்ட் லீ தெரிவித்தார்.