கோலாலம்பூர், மார்ச் 20 – தென்னை மட்டை விழுந்ததில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் முன்புறம் பயணிகள் அமரும் இருக்கைக்கு அருகேயுள்ள கண்ணாடி உடைந்ததால் அக்காரின் உரிமையாளர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள தென்னை மட்டை தனது Perodua Bezza கார் மீது விழுந்ததில் காரின் கண்ணாடி உடைந்ததை Klang People என்ற முகநூல் குழுமத்தை சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தது வைரலானது.
அந்த தென்னை மட்டை கனமாகவும் அதன் அளவு பெரிதாகவும் இருந்ததால் அதனை அகற்றுவதில் கார் உரிமையாளர் சிரமத்தை எதிர்நோக்கியதை அந்த இரண்டு நிமிட காணொளியில் காண முடிந்தது.
ஒரு கடைக்கு அருகே சாலையோரத்தில் அக்காரை நிறுத்தி வைத்திருந்தபோது அக்காரில் பயணிகள் எவரும் அமர்ந்திருக்கவில்லையென தெரிகிறது. எனினும் இச்சம்பவம் கிள்ளானில் நடந்ததா அல்லது இதர இடத்தில் நடந்ததா என்று தெரியவில்லை.
இதுவரை அந்த காணொளியை 5,300க்கும் மேற்பட்டோர் கண்டுள்ளதோடு 42 பேர் அதனை பகிர்ந்துள்ளனர். இதனிடையே காரில் ஏற்பட்ட சேதத்திற்காக ஊராட்சி துறையிடம் இழப்பீடு கோரும்படி அக்காரின் உரிமையாளருக்கு நெட்டிசன்களில் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.