சியோல், நவம்பர் 30 – தென் கொரியா, இன்சியான் அனைத்துலக விமான நிலையத்தில், பயணிகளின் பயணப் பைகளில் இருந்து, கடந்த சில ஆண்டுகளாக விலை உயர்ந்த பொருட்களை திருடி வந்தததாக நம்பப்படும், அந்த விமான நிலைய பணியாளர் ஒருவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு நவம்பர் தொடங்கி இவ்வாண்டு அக்டோபர் ஆறாம் தேதி வரையில், மொத்தம் 208 கொள்ளை குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
பயணப் பெட்டிகளை விமானத்தில் ஏற்றும் வேலையை செய்து வந்த ஆடவர், சக பணியாளர்கள் ஓய்வுக்கு செல்லும் சமயங்களில், CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா இல்லாத இடத்தில், பயணிகளின் விலை உயர்ந்த பயணப் பைகளை திறந்து, அதில் இருக்கும் ஆடம்பர பொருட்களை திருடி வந்ததாக கூறப்படுகிறது.
ஒரே பயணப் பையிலிருந்து பொருட்களை எடுத்தால் மாட்டிக் கொள்வோம் என தெரிந்து, பல பெட்டிகளில் ஒவ்வொரு பொருளாக அவர் எடுத்ததும் தெரிய வந்துள்ளது.
எனினும், நான்கு கோடி வோன் அல்லது ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 588 ரிங்கிட் மதிப்புடைய ஹெர்ம்ஸ் (Hermes) பையை காணவில்லை என்பது உட்பட பொருட்கள் தொலைந்து போனது தொடர்பில் பெறப்பட்ட சில புகார்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவ்வாடவர் சிக்கினார்.
திருடிய விலை உயர்ந்த பொருட்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு அவர் வாழ்க்கையை நகர்த்தி வந்ததாகவும், விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரது வீடு, அலுவலகம், கார் ஆகியவற்றை சோதனையிட்ட போலீசார், திருடப்பட்டதாக நம்பப்படும் 218 பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.