சியோல், ஜனவரி 2 – தென் கொரியாவின், எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மூங், கழுத்தில் கத்தி குத்துக்கு இலக்கானதில் படுகாயமடைந்தார்.
அந்நாட்டின் துறைமுக நகரமான புசானில், செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது லீ தாக்கப்பட்டார்.
செய்தியாளர்கள் புடைசூழ நடந்து செல்லும் லீயை, அடையாளம் தெரியாத ஆடவன் ஒருவன் கழுத்தில் குத்தும் காட்சிகளை, உள்நாட்டு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது.
புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை லீ பார்வையிட்டு விட்டு திரும்பும் போது, அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
கத்தி குத்துக்கு இலக்கான 59 வயது லீ தரையில் சரியும் காட்சிகளும், பொதுமக்கள் அவருக்கு உதவ விரையும் காட்சிகளும், அதில் நபர் ஒருவர் கைக்குட்டையை வைத்து லீயின் கழுத்தை அழுத்தியபடி நிற்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட ஆடவன், சம்பவ இடத்திலேயே கைதுச் செய்யப்பட்ட வேளை ; அதிக இரத்தப்போக்குக்கு இலக்கான லீயின் நிலை தற்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது.