
தேசிய கோவில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி-15,
நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களின் பிரச்னைகளைத் தீர்க்க, தேசிய கோவில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற அவசரத் தேவையை விவாதிக்க சிறப்பு கூட்டமொன்று இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்றது.
மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் உள்ளிட்ட இந்து அமைப்பின் பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர்.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணனும் அதில் கலந்துகொண்டார்.
கூட்டத்தில், அனைத்து இந்து தலைவர்களும் பிரதிநிதிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என ஒற்றுமை, வெளிப்படைத்தன்மை, கூட்டுத் தீர்மானம் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, நிலப் பதிவு இல்லாத கோவில்களை குறிப்பிட “Kuil Tanpa Pendaftaran Tanah’ என்ற அதிகாரப்பூர்வ சொல்லையே பயன்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அதே நேரத்தில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை உடனடியாகச் சந்திக்க அனுமதியும் கோரப்பட்டுள்ளது.
KTKP தொடர்பான பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் அவரிடம் முன்வைக்கப்படவுள்ளன.
கோவில்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, தர்மத்தை காக்கவும், வழிபாட்டு தலங்களைப் பாதுகாக்கவும், நீதியை நிலைநாட்டவும் எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கியமான படியாகும் என, இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ரிஷிகுமார் வடிவேலு குறிப்பிட்டார்.



