
புத்ராஜெயா, செப்டம்பர்-4,நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியச் சமூகம் ஒருபோதும் புறக்கணிக்கப்படாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
புத்ராஜெயாவில் சமுதாயத் தலைவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அன்வார், இந்தியச் சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்த மடானி அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என்றார்.
இச்சந்திப்பில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியத் தொழில்முனைவோருக்கான நிதி உதவிகளை விரிவுபடுத்துதல், மித்ரா அமைப்பை வலுப்படுத்துதல், TVET திறன் பயிற்சி மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டித் திட்டங்களை மேம்படுத்துதல் ஆகியவை அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
அதேவேளை, வறுமை, குடியுரிமைப் பிரச்னைகள் மற்றும் அரசாங்க உதவிகளைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் போன்ற தீர்க்கப்படாத சவால்களுக்கு விரைவாகவும் திறம்படவும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் பிரதமர் அச்சந்திப்பில் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் உதவிகளும் திட்டங்களும் நேரடியாகத் தேவைப்படுவோரைச் சென்றடைவதை உறுதிச் செய்ய, சேவை விநியோகத்தை சீரமைக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் முகவர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கையில் உண்மையான, மாற்றங்களைக் கொண்டுவர அரசாங்க அமைப்புகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.



