தேசிய ஹாக்கிக் குழுவும் ஜூனியர் குழுவும் கலைக்கப்பட்டன; பயிற்சியாளர் அருள் நிலைமை ஞாயிறு தெரியும்
கோலாலம்பூர், பிப் 1 – தேசிய ஹாக்கிக் குழு மற்றும் ஜூனியர் ஹாக்கிக் குழுக்களை மலேசிய ஹாக்கி சம்மேளனம் கலைத்துவிட்டதோடு தலைமைப் பயிற்சியாளர் A. அருள் செல்வராஜ் நிலைமை குறித்து ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யவிருக்கிறது. ஓமனில் நடைற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டி குறித்த விரிவான அறிக்கையை அருள் செல்வராஜ் பயிற்சிக்குழுத் தலைவர் டத்தோ மஜிட் மஞ்சித் அப்துல்லாவிடம் வழங்குவார் என மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமல் தெரிவித்தார்.
இரண்டு வாரத்திற்கு முன் ஒமானில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் 5ஆவது இடத்தைப் பெற்றதைத் தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு மலேசிய ஹாக்கிக் குழு தேர்வு பெறத் தவறியது. தகுதிச் சுற்று போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன. தங்களது பயிற்சியாளர்கள் உட்பட தேசிய ஹாக்கிக் குழு மற்றும் ஜூனியர் குழுவை மலேசிய ஹாக்கி சம்மேளனம் கலைத்துவிட்டது. இனி அடுத்த கட்ட நடவடிக்கையை பயிற்சிக்குழு தலைவர் மஜிட் மஞ்சித் எடுப்பார் என சுபஹான் கூறினார்.