கோலாலம்பூர், ஜன 20 – தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தண்ணீர் மலை, கல்லுமலை, பத்துமலை என முருகன் திருதலங்களில் பிரபலமானது பக்தர்கள் ஏந்தி வரும் காவடிகளே. அதிலும் குறிப்பாக, பத்துமலை தைப்பூசத்தில் பிரசித்திப்பெற்றது வண்ண விளக்குகள், பூக்கள் என அலங்கரிக்கப்பட்ட பூ காவடிகள். அவற்றை காண்பதற்கென்றே பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் பத்துமலையில் கூடுவது வழக்கம்.
அவ்வகையில் 40 வருடங்களாக பூ காவடிகளை உருவாக்கி, காவடி எடுப்பவர்களை ஒருங்கிணைத்து வரும் ஜெகதீஸ்வரன் மற்றும் அவர்தம் குழுவினர், தன்னுடைய இத்தனைக்கால அனுபவத்தை அவர் வணக்கம் மலேசியாவிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
காவடிகளை உருவாக்கினோம், அன்றைய நாள் நேர்த்திக் கடனை செலுத்தினோம் என்பதோடு மட்டும் முடிந்து விடுவதல்ல இவர்களின் இந்த சேவை. மாறாக நேர்த்தியாக தங்களுடன் இணைந்து காவடி எடுப்பவர்களை முறையாக ஒருங்கிணைத்து, அவர்களை வழிநடத்தி, ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முனனிட்டு வீடு வீடாகச் சென்று வீட்டு பூஜைகளையும் இவர்கள் ஏற்பாடு செய்து வருவது இந்த பூக்காவடி குழுவினரின் வருடாந்திர நடவடிக்கையாகும்.
இளைய தலைமுறையினர் தற்போது பூ காவடிகளை உருவாக்குவதிலும் அதனை ஏந்தி நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதிலும் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், சிறிவயது முதலே இந்த பூக்காவடி குழுவினரை பார்த்து வளர்ந்து, கடந்து 7 ஆண்டுகளாக காவடி எடுத்து வரும் சர்வேஷ் இவ்வருடம் இக்குழுவினரின் மிகப்பெரிய பூக்காவடியை ஏந்தி தனது நேர்த்திக் கடனை முருகப் பெருமானுக்கு செலுத்தவிருக்கிறார்
அலங்கார பிரியனான முருகனுக்கு காலத்துக்கு ஏற்ற ரசனையோடு காவடி தயாரிப்பில் கண்கவர் அம்சங்களையும் புதுமைகளையும் புகுத்தினாலும் சமய நெறியை விட்டு கொடுக்காமல் காவடி ஏந்த வேண்டும் என்பதே தமது எதிர்ப்பார்ப்பு என ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
அவ்வகையில் நம் சமய மரபுக்கு ஏற்ப தொன்று தொட்டு இந்த காவடி தயாரிப்பு முறைகளை அடுத்த தலைமுறைக்கு இவர் போன்றோர் கடத்தி வருவது பாராட்டகூடியது.