
கோலாலம்பூர், ஜூன்-27 – குற்றச்சாட்டிலிருந்து ஒருவரை விடுவித்து ஆனால் வழக்கிலிருந்து விடுவிக்காத DNAA முறை தொடர்பில் விமர்சிப்பவர்கள் குறித்து, பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த DNNA விடுதலைகள் அண்மைய காலமாக நீதிமன்றங்களில் தொடருவதால் பல தரப்பினர் தம்மை குறைகூறி வருகின்றனர்; ஏதோ தாம் தான் நீதித்துறையில் தலையீடு செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயலுகின்றனர்.
ஆனால் அது உண்மையல்ல என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தினார்.
மலேசிய நீதிபரிபாலனத் துறை சுயேட்சையானது சுதந்திரமானது; அதில் தமது தலையீடோ அரசாங்கத்தின் தலையீடோ கிடையாது என்றார் அவர்.
“நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று ஒரு பக்கம் கூறுகிறீர்கள்; ஆனால் ஊழல் வழக்கில் ஒருவர் DNAA முறையில் விடுவிக்கப்பட்டால் உடனே அதற்கு நான் தான் காரணம் என என் மீதே ‘பாய்கிறீர்கள்’; யாராவது சிறைக்கு அனுப்பட்டாலும் நான் தான் காரணம் என்கிறீர்கள். உங்களுக்கு என்ன தான் வேண்டும்?” என அன்வார் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் என்பது ஜனநாயக நாட்டில் சகஜம் தான்; ஆனால் இப்படி முன்னுக்குப் பின் முரணாக விமர்சனங்கள் வைப்பது நியாயமல்ல என அவர் சொன்னார்.
ஊழல் வழக்குகள் குறிப்பாக அரசியல்வாதிகள் மீது பாய்ந்தால் அது அரசியல் பழிவாங்கல் என்கிறார்கள், அதுவே நடவடிக்கை இல்லையென்றால் அரசாங்கம் மெத்தனம் என குறை சொல்கிறார்கள்; இவர்களுக்கு என்னதான் வேண்டுமென தனக்கு புரியவில்லை என பிரதமர் ஏமாற்றத்துடன் கூறினார்.
கோலாலம்பூரில் 2025 ஆசியான் – மடானி தலைமைத்துவத் திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு பேசினார்.