கோலாலம்பூர், பிப் 15 – தொலைபேசி மோசடி கும்பலிடம் வர்த்தகர் ஒருவர் 692,500 ரிங்கிட் தொகையை இழந்தார். புத்ரா ஜெயாவில் தொடர்பு இலக்கவியல் அமைச்சின் அதிகாரி என கூறிக்கொண்ட நபரிடமிருந்து ஜனவரி 28 ஆம் தேதி அந்த 38 வயது வர்த்தகர் அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து பெரிய அளவில் மோசடிக் கும்பலினால் பணத்தை இழந்ததாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹம்மட் ஸாக்கி ஹாருன் தெரிவித்திருக்கிறார். சட்டவிரோத பண பரிமாற்றம், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றில் அந்த வர்த்தகர் சம்பந்தப்பட்டுள்ளதால் ACP இஸ்மாயில் என்பவரிடம் பேசும்படி அந்த நபர் கூறியிருகிறார்.
அதன் பின் பெர்லீஸ் போலீஸ் தலைமையகத்திலிருந்து ACP இஸ்மாயில் பேசுவதாக தம்மை அடையாளக் கூறிக்கொண்ட மற்றொரு நபர் பேங்க் நெகாராவின் அகப்பக்கத்திலிருந்து அஃபின் பேங்க் மற்றும் பேங்க் இஸ்லாமிலுள்ள அந்த வர்த்தகரின் வங்கிக் கணக்கு விவரங்களை பூர்த்தி செய்யும்படியும் அந்த வர்த்தகரை கேட்டுக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதியன்று தமது அஃபின் பேங்க் கணக்கிலிருந்து மூன்று லட்சம் ரிங்கிட்டை கட்டம் கட்டமாக மற்றொரு வங்கிக் கணக்கில் அந்த வர்த்தகர் பட்டுவாடா செய்துள்ளர். பிப்ரவரி 4ஆம் தேதி யாத்திரிக நிதி நிர்வாக கணக்கிலிருந்து மேலும் நான்கு லட்சம் ரிங்கிட்டை வெவ்வேறு வங்கிக் கணக்கிற்கு பட்டுவாடா செய்துள்ளார். தமது சேமிப்பு கணக்கிலிருந்து அனைத்து பணமும் மறைந்ததைத் தொடர்ந்து தாம் மோசடிக்கு உள்ளானதாக அந்த வர்த்தகர் புகார் செய்திருப்பதாக முஹம்மட் ஸாக்கி ஹாருன் தெரிவித்தார்.