கோலாலம்பூர், நவ 19 – ஷா அலாம் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் சோதனை மேற்கொண்ட சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தொழிற்சாலை ஊழியர்களுக்கான பஸ்களை ஓட்டிய இரு இந்தியப் பிரஜைகளை கைது செய்தனர். அந்த பஸ் ஓட்டுனர்கள் ஷா அலாம், செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் சாலை போக்குவரத்துத் துறையின் இயக்குனர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார். போக்குவரத்து போலீஸ் மற்றும் குற்றவியல் விசாரணைத்துறையின் ஒத்துழைப்போடு வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். லைசென்ஸ் இன்றி பஸ் ஓட்டியதோடு பல்வேறு குற்றங்களில் அந்த இரண்டு பஸ் ஓட்டுனர்களும் ஈடுபட்டுள்ளது விசாரணை மூலம் கண்டறியப்பட்டதாக அஸ்ரின் போர்ஹான் கூறினார். இந்த பரிசோதனை நடவடிக்கையின் மூலமாக அனைத்து வகையான வாகனங்களுக்கும் 871 குற்றப் பதிவுகளும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.