கோலாலம்பூர், பிப் 2 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கான சிறைத்தண்டனை 12 ஆண்டிலிருந்து ஆறு ஆண்டாகவும் அவருக்கான அபராதம் 210 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைக்கப்பட்டிருப்பதாக மன்னிப்பு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் அவர் சிறைத் தண்டனை குறைக்கப்பட்டதால் 2028 ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார்.
அதே வேளையில் குறைக்கப்பட்ட அந்த அபராதத் தொகையை நஜீப் செலுத்தாவிட்டால் அவர் மேலும் ஒரு ஆண்டுகாலம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் 2029 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதிதான் அவர் விடுவிக்கப்படுவார் என பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா தலைமையில் டிசம்பர் 29 ஆம் தேதி கூடிய மன்னிப்பு வாரியத்தில் முடிவு செய்யப்பட்டதாக கோலாலம்பூர் கூட்டரசு பிரதேம், லபுவான் மற்றும் புத்ரா ஜெயா கூட்டரசு பிரதேசத்திற்கான மன்னிப்பு வாரியத்தின் பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.