வாஷிங்டன், நவம்பர் 27 – நடுவானில், பெண் ஒருவர் திடீரென கத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியதால், அமெரிக்காவின் பிராண்டியர் (Frontier) ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அந்நாட்டின், டல்லாஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அச்சம்பவம், நவம்பர் 16-ஆம் தேதி, சம்பந்தப்பட்ட விமானம், ஹூஸ்டனில் (Houston) இருந்து டென்வர் (Denver) நோக்கி பயணமான போது நிகழ்ந்தது.
அடையாளம் தெரியாத அப்பெண், திடீரென இருக்கையை விட்டு எழுந்து, கத்தி கூச்சலிடுகிறார். அவரை விமான பணியாளர்கள் சமாதானம் செய்ய முயலுகின்றனர். எனினும், அப்பெண் விமான இருக்கைகள் மேல் ஏறி ஓடுவதோடு, அங்கிருந்த ஒருவரை தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்றை, அதே விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
“என்னை கட்டுப்படுத்துவதை நிறுத்துங்கள்” என அப்பெண் ஆவேசமாக கூச்சலிடும் காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.
விமானம் டல்லாஸில் தரையிறங்கியதும், அப்பெண் அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டார்.