கோலாலம்பூர் , பிப் 25 – நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடங்கவிருப்பதை தொடர்ந்து பல முக்கிய சட்டங்களும் தீர்மானங்களும் இம்முறை நடைபெறும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க விவகாரங்களுக்காக எட்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்வழி நாடாளுமன்றத்தின் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்தின்போது பல்வேறு மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குடியுரிமை மசோதா தாக்கல் செய்வதற்கு தயாரானால் விவாதிக்கப்படக்கூடிய குறிப்பிடத்தக்க சட்டமாக அது அமையக்கூடும் என மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் துங்கு மோஹர் துங்கு முகமட் மொக்தார் தெரிவித்தார்.
அரசாங்க விவகாரங்களுக்கு எட்டு நாட்கள் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டத்தோ டாக்டர் சிவமுருகன் பாண்டியன் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். 15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தொடக்கி வைத்து உரையாற்றவிருப்பதால் அவரது உரையை மலேசியர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.