கோலாலம்பூர், நவம்பர் 29 – இவ்வாண்டு ஜூலை தொடங்கி நவம்பர் வரையில், நாட்டில் ஒன்பது குரங்கம்மை சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டது.
வெளிநாட்டவர் ஒருவரும், உள்நாட்டவர்கள் எண்மரும் அதனால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஜூலையில், தலைநகரில், முதல் மற்றும் இரண்டாவது குரங்கம்மை சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டன.
அதனை அடுத்து, கடந்த மாதம் சிலாங்கூரில், மூன்றாவது, நான்காவது சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.
ஐந்தாவது சம்பவம், இம்மாதம் ஐந்தாம் தேதி, சரவாக்கில் பதிவான வேளை ; ஆகக் கடைசியாக, இதர நான்கு சம்பவங்கள், தலைநகரில் அடையாளம் காணப்பட்டதாக, சுகாதார துணையமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் செளனி தெரிவித்தார்.
குரங்கம்மை நாட்டில் ஊடுருவாமல் இருப்பதை உறுதிச் செய்ய சுகாதார அமைச்சு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நாட்டின் நுழைவாயில்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, குடிநுழைவுத் துறையின் ஒத்துழைப்போடு, குரங்கம்மை நோய் அறிகுறிகள் தென்படும் பயணிகளை அடையாளம் காண்பதும் அதில் அடங்குமென துணையமைச்சர் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
குரங்கம்மை நோய்கான அறிகுறிகள் தென்படுபவர்கள், அந்நோய் தொற்றிலிருந்து விடுபடும் வரையில், வீட்டில் அல்லது பாதுகாப்பான இடத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.