கோலாலம்பூர், ஜன 21 – அரசாங்கம் கடந்த ஆண்டு ஜவுளிக் கடைகள் உட்பட 7,500 வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதித்த போதிலும் முடிதிருத்தும் மற்றும் பொற்கொல்லர்களுக்கு இன்னமும் ஆள் பற்றாக்குறை இருப்பதாக தொழில் முனைவர், கூட்டுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இதுவரை ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இன்னும் 5,000 இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்று மனிதவள அமைச்சு தம்மிடம் தெரிவித்திருப்பதாக ரமணன் கூறினார்.
இதற்கு முன்னர் முடக்கப்பட்ட இந்த மூன்று துறைகளிலும் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு சேர்ப்பதற்கு அனுமதிக்க கடந்த செப்டம்பர் மாதம் அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் முன்னாள் மனித வள அமச்சர் சிவக்குமார் கூறியிருந்தார். இந்த மூன்று துறைகளுக்கும் தேவைப்படும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் பாரம்பரியமாக இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முடியாத காரணத்தால் சில தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அல்லது மூடப்படும் தருவாயில் இருப்பதாகவும் அப்போது சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியம் உள்ளது, ஏனெனில் உள்ளூர்வாசிகள் முடிதிருத்தும் கடைகளில் வேலை செய்ய விரும்புவதில்லை, இது நீண்ட நேரம் மற்றும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேலை செய்ய வேண்டியிருப்பதாக மலேசிய இந்திய சிகையலங்கார உரிமையாளர்கள் சங்கத்தின் உதவி செயலாளர் எம் மீனக் குமார் கூட இதற்கு முன் கூறியிருந்தார்.