கோலாலம்பூர், டிச 20 – வணக்கம் மலேசியா நித்தியானந்தாவின் கைலாசா தொடர்பில் வெளியிட்ட செய்திக்கு, கைலாசாவிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் இரண்டாம் திகதி, “நித்தியானந்தாவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்ட பாராகுவே அதிகாரி பணி நீக்கம்’ எனும் தலைப்பில் வெளிவந்த செய்தியில் “நித்தியானந்தா இந்திய போலிசாரால் இன்னும் தேடப்பட்டு வருகிறார்“ எனும் வாக்கிய பயன்பாடு தொடர்பிலும் “இல்லாத கைலாசா” எனும் சொல் பயன்பாடு தொடர்பிலும் அதிருப்தியும் மறுப்பும் தெரிவித்து கைலாசா தரப்பிடமிருந்து contact@kailaasa.org எனும் முகவரிலிருந்து மின்னஞ்சல் அனுப்பட்டதோடு அதனைத் தொடர்ந்து நேற்று ஒரு காணொளியையும் கைலாசாவின் முகநூலில் வெளியிடப்பட்டுள்ளது.
வணக்கம் மலேசியா இந்து விரோத கட்டுரையை வெளியிட்டுள்ளதாக கைலாசா தரப்பு குற்றம் சாட்டியிருந்தது.
அந்த மின்னஞ்சலுக்கு பதிலளித்திருந்த வணக்கம் மலேசியா, எந்த தருணத்திலும் எந்த மதத்திற்கும் எதிராக விரோதப் போக்குடன் செய்தி வெளியிட்டதில்லை என உறுதியாக கூறியிருந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக செய்தித்துறையில் செயல்பட்டு வரும் வணக்கம் மலேசியாவின் நம்பகத்தன்மையை மலேசியர்கள் அறிவார்கள் என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தது.
அதிகாரத்துவ தரப்பு மற்றும் பொதுவெளியில் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே அந்த செய்தியை வெளியிட்டிருந்ததாக வணக்கம் மலேசியா விளக்கம் கொடுத்திருந்தது.
அதே சமயத்தில், கைலாசா தரப்பு அச்செய்தி தொடர்பில் விளக்கம் கொடுக்கத் தயார் என கடிததத்தில் கூறியதன் அடிப்படையில் சுவாமி நித்தியானந்தாவை பேட்டி எடுக்க வணக்கம் மலேசியா கைலாசாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
கைலாசாப் பற்றி மக்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்ப்பதற்கு சுவாமி நித்தியானந்தா அவர்களே நேரடியாக விளக்கம் தர இப்பேட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வணக்கம் மலேசியா கூறியுள்ளது.
தற்போது கைலாசாவிடமிருந்து வரக்கூடிய பதிலுக்காக வணக்கம் மலேசியா காத்திருக்கிறது.