
கோம்பாக், மே-9-சிலாங்கூர், சுங்கை பீசாங் நீர்வீழ்ச்சிக்குச் சென்ற 11 மலையேறிகள், அங்குள்ள ஒரு சுரங்கப்பாதையில் திடீரென சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கனமழை காரணமாக ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததே இதற்குக் காரணமாகும்.
நேற்று மாலை சுமார் 4 மணியளவில், செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இதுகுறித்த அவசர அழைப்பு கிடைத்தது.
சம்பவ இடம் விரைந்த மீட்புக் குழுவினர், ஆற்று நீர் மிக வேகமாகப் பாய்ந்ததால் 11 பயணிகள் சுரங்கப்பாதைக்குள் வெளியேற முடியாமல் தவிப்பதைக் கண்டறிந்தனர்.
கடுமையான நீரோட்டத்தையும் பொருட்படுத்தாமல், தீயணைப்பு வீரர்கள் மிகவும் சவாலான முறையில் இந்த மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இரவு 7 மணியளவில் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பலத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பருவமழை காலங்களில் இது போன்ற நீர்நிலைகளுக்குச் செல்லும் போது பொது மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வானிலை மாற்றங்களைக் கவனித்து செயல்பட வேண்டும் என்றும் தீயணைப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.



