
கோலாலம்பூர், மே-9- முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்புக் கிடைக்க வேண்டுமென, இந்நாட்டு இந்தியச் சமூகமே அதிகம் விரும்புகிறது.
மெர்டேக்கா செண்டர் ஆய்வு மையம் நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், 62.2 விழுக்காட்டு இந்தியர்கள் நஜீப் அரச மன்னிப்புக்குத் தகுதியானவர் என தெரிவித்துள்ளனர்.
பிரதமராக இருந்த காலத்தில் இந்தியர்களுக்கு அதிகம் செய்தவர் என்பதால், அவருக்கான விசுவாசத்தை இதில் காண முடிகிறது.
இவ்வேளையில், நஜீப்பின் அரச மன்னிப்புக்கு முஸ்லீம் பூமிபுத்ராக்களின் ஆதரவு 50.5 விழுக்காடாகவும், மலாய்க்காரர்களின் ஆதரவு 43 விழுக்காடாகவும் உள்ளது.
சீனர்களில் 95 விழுக்காட்டினர் நஜீப்புக்கு அரச மன்னிப்பு கிடைப்பதை எதிர்க்கின்றனர்; முஸ்லீம் அல்லாத பூமிபுத்ராக்களில் 51 விழுக்காட்டினருக்கு அவர் விடுதலையாவது பிடிக்கவில்லை.
தேசிய முன்னணி அனுதாபிகள் மற்றும் மலாய் – முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில் நஜீப்புக்கு பெரும் ஆதரவு இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அவருக்கு அரச மன்னிப்பு வழங்கக் கூடாது என்ற கருத்தே மேலோங்கியுள்ளது.
மக்களின் நம்பிக்கைக்கு துரோகமாக நடந்துகொண்டது, நீதிமன்ற வழக்குகள் மற்றும் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுப்பது போன்ற காரணங்களைச் சுட்டிக் காட்டி, 57.8 விழுக்காட்டு மலேசியர்கள் அரச மன்னிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
32.7 விழுக்காட்டினர் மட்டுமே , நாட்டுக்கான நஜீப்பின் பங்களிப்பை மேற்கோள்காடி அரச மன்னிப்பை ஆதரித்துள்ளனர்.
கடந்த மார்ச் 27 முதல் ஏப்ரல் 17 வரை அனைத்து 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 1,210 பேரிடம் அந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது