கோலாலம்பூர், ஜன 8 – முழு தங்கும் விடுதியைக் கொண்ட பள்ளியிலிருந்து பகடிவதையினால் மாணவர் ஒருவர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் போலீசார் தங்களது விசாரணையை கிட்டத்தட்ட முடித்துக் கொண்டிருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அல்லாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்திருக்கிறார். பகடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர் உட்பட அப்பள்ளியைச் சேர்ந்த 35 தனிப்பட்ட நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
விசாரணையில் இதுவரையில் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோர் அலட்சியத்துடன் இருந்தது தொடர்பில் போலீஸ் எதனையும் கண்டறியவில்லை. விசாரணை அறிக்கையை இவ்வாரம் அரசு தரப்பு வழக்கறிஞரின் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு முன் போலீசார் மேலும் சில தனிப்பட்ட நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யவிருக்கும் தகவலையும் அல்லாவுடின் வெளியிட்டார்.