கோலாலம்பூர், மார்ச் 6 – தலைநகர், ஜாலான் பங்சார் உத்தாமா 6-ரிலுள்ள, “நாசி கண்டார்” உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீயில், 45 வயது ஆடவர் ஒருவர் கடுமையான தீப்புண் காயங்களுக்கு இலக்கானார்.
காலை மணி 11.44 வாக்கில் அந்த தீ விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததை, கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கை மைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட உணவகத்தின் 80 விழுக்காட்டு பகுதி தீயில் அழிந்ததாக கூறப்படுகிறது.
நண்பகல் மணி 12.40 வாக்கில் தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீக்கான காரணமும், மொத்த இழப்பும் ஆராயப்பட்டு வருகிறது.
முன்னதாக, அந்த “நாசி கண்டார் “உணவகத்தில் தீ ஏற்பட்ட தகவலை சமூக ஊடக பயனர்கள் சிலர் பகிர்ந்து இருந்தனர்.
வெடிப்புக்கு பின்னர் கரும் புகை சூழத் தொடங்கியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தீ பரவக்கூடும் எனும் அச்சத்தில், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இதர உணவகங்களின் பணியாளர்களும், தங்கள் கடைகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.