
கோலாலம்பூர், அக்டோபர்-18, 2025 வரவு செலவு அறிக்கையில் இந்திய மகளிர் தொல்முனைவர்களின் மேம்பாட்டுக்காக பசுமைக் கடனுதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் மகளிர் பிரிவுத் தலைவி Dr எஸ். ஹேமலா அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியப் பெண் தொழில்முனைவோர் மேற்கொண்டு வரும் நீடித்த-நிலையான இயற்கைத் தோழமை (environmental friendly) திட்டங்களுக்கு ஆதரவளிக்க, பசுமைக் கடன் முக்கியமென்றார் அவர்.
வணிகத்தில் இயற்கைத் தோழமை நடைமுறைகளை ஒருங்கிணைப்பதில், பசுமைக் கடனுதவி முக்கிய உந்துச் சக்தியாக திகழும்.
இதன் வழி, நீண்ட கால நிலைத்தன்மைக்கு பொருளாதார வளர்ச்சியோடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் ஒரு சேர ஒருங்கிணைக்க வழி ஏற்படும் என ஹேமலா சுட்டிக் காட்டினார்.
வணிகக் கண்காட்சிகள் மற்றும் ஏற்றுமதிக்கான வழிகாட்டுதல்களுக்கு மானியங்கள் வழங்கினால், இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிய உதவியாக இருக்கும்.
அதே சமயம், இணைய வணிகம், டிஜிட்டல் சந்தை போன்ற திட்டங்களில் முனைப்புக் காட்ட, பெண் தொழில்முனைவோருக்கு டிஜிட்டல் திறன் பயிற்சிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என, APS Puteri Sdn Bhd-டின் இயக்குநரும் நாட்டின் முன்னணி இந்திய பெண் தொழில்முனைவர்களில் ஒருவருமான Dr ஹேமலா வலியுறுத்தினார்.
பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாலை 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு அறிக்கை இதுவாகும்.