செப்பாங், நவம்பர் 24 – தாமான் மாஸிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த, இந்தோனேசிய பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
நேற்று காலை மணி ஏழு வாக்கில், பத்தாவது மாடியிலிருந்து விழுந்த அந்த 42 வயது பெண், அக்கட்டடத்தின் ஏழு மாடியிலுள்ள கம்பியில் சிக்கில் கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார்.
பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியிலிருந்து விழுந்த சம்பவம் தொடர்பில், நேற்று காலை மணி 7.19 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததை, சைபர்ஜெயா தீயணைப்பு மீட்புப் படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த, தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், அக்கட்டடத்தின் ஏழாவது மாடி வராண்டாவில் பெண் ஒருவர் வலியுடன் படுத்திருப்பதை கண்டு, அவரை மீட்டதாக அவர் சொன்னார்.
இடுப்பில் பலத்த காயங்களுக்கு இலக்கான அப்பெண், பின்னர் சிகிச்சைக்காக மருத்துவ பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.