கோம்பாக், ஜனவரி 19 – பத்துமலைத் திருத்தலத்திலுள்ள, ஸ்ரீ சுப்பிரமணியர் குகைக் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் வருகையாளர்கள் செல்ல, 272 படிகளுக்கு மாற்றாக இவ்வாண்டு “எஸ்கலேட்டர்” மின்படிக்கட்டுகள் கட்டப்படும்.
மின்படிக்கட்டுகளை கட்ட தேவையான நிதியில் ஒரு பகுதியை மத்திய அரசாங்கம் வழங்கும் என, கோவில் செயற்குழு தலைவர் ஆர்.நடராஜா நம்பிக்கை தெரிவித்தார்.
“இவ்வாண்டு முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் குகைக் கோவிலுக்கு சென்று முருகனை தரிசிக்க உதவும் வகையில், மின்படிக்கட்டுகள் அமைக்கப்படும். அதற்கு மத்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கும் என நம்புகிறேன்” என மனித அமைச்சர் ஸ்டீவன் சிம்னுடன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடராஜா சொன்னார்.
எனினும், அத்திட்டத்திற்கு மொத்தம் எவ்வளவு செலவாகும் என்ற விவரம் எதையும் அவர் வெளியிட வில்லை.
தற்சமயம், மலை உச்சியில் வீற்றிருக்கும் குகைக் கோவிலை சென்றடைய, பக்தர்களும், பார்வையாளர்களும் வண்ணமயமான 272 படிக்கட்டுகளை ஏறிச் செல்ல வேண்டும்.
இவ்வேளையில், கடந்தாண்டு பத்துமலை திருத்தலத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளுக்காக, பத்து லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை வழங்கிய முன்னாள் மனிதவள அமைச்சரும், பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வி. சிவக்குமாருக்கு, நடராஜா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதோடு, இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவுக்கு பின்னர், பத்துமலை திருத்தல வளாகத்தில், மூன்று கோடியே 50 லட்சம் ரிங்கிட் செலவில், பல்நோக்கு மண்டபத்தின் கட்டுமானப் பணிகளும் தொடங்குமென நடராஜா சொன்னார்.