கோலாலம்பூர், ஜன 2 – சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்துமலை அருள்மிகு ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தின் 2023ஆம் ஆண்டுக்கான இருமுடி திருவிழா மிகச்சிறப்பாக நேற்று முன்தினம் நடைப்பெற்றது.
நேர்த்தியான விரதம், ஒவ்வொரு நாளும் பக்தியுடன் பூஜை என மொத்தம் 41 நாட்கள் மண்டல பூஜைகள் நடைப்பெற்று, கடந்தாண்டு டிசம்பர் 30ஆம் திகதி படி பூஜை நடத்தப்பட்டு, டிசம்பர் 31ஆம் திகதி கோம்பாக்கில் உள்ள கம் சேங் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் குருசாமிகள் தலைமையில் இருமுடி கட்டு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் இருமுடி கட்டு ஏந்திய சுமார் 2000 பக்தர்கள் கம் சேங் ஆலயத்திலிருந்து ஐயப்பசுவாமி தேவஸ்தானம் வரை பாத யாத்திரையை மேற்கொண்டு ஐயப்பசுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செய்துள்ளனர்.
நேற்றைய இந்த இருமுடி திருவிழாவில் ஏறக்குறைய 5000 பக்தர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, பத்துமலை அருள்மிகு ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தை பிரதிநிதித்து பக்தர்கள் ஜனவரி 3ஆம் திகதி தொடங்கி சபரிமலை ஐய்யப்பா ஆலயத்திற்கு தங்களின் யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளனர்.