கோலாலம்பூர், டிச 31 – துப்பாக்கி முனையில் நடைபெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆடவன் ஒருவனை இன்று விடியற்காலையில் புக்கிட் மெர்தாஜாமில் போலீசார் கைது செய்யமுயன்றபோது ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த ஆடவன் புரோட்டான் X 70 காரை ஓட்டிக்கொண்டு மச்சாங் புபோக்கிலிருந்து சுங்கை லெம்புவை நோக்கி சென்றதை பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் கடும் குற்றப் பிரிவைச் சேர்ந்த குழுவினர் கண்டறிந்ததாக பினாங்கு போலீஸ் தலைவர் காவ் கோக் சின் தெரிவித்தார்.
அந்த காரை நிறுத்தும்படி போலீஸ் குழுவினர் உத்தரவு பிறப்பித்தனர். எனினும் அந்த நபர் துப்பாக்கியினால் போலீஸ்காரர்களை நோக்கி சுட்டதால், அதற்கு பதிலடியாக போலீஸ்கார்கள் திரும்ப சுட்டதால் அந்த நபர் மரணம் அடைந்தான் என காவ் கோக் சின் கூறினார். அந்த 44 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற கார் போலி பதிவு எண் பட்டையை கொண்டிருந்ததையும் போலீசார் கண்டுப்பிடித்தனர். அதோடு இம்மாத தொடக்கத்தில் நான்கு இலக்க லாட்டரிக் கடை மற்றும் வட செபரங் பெராயில் ஒரு கடையிலும் கொள்ளையிட்டுள்ளான். அந்த ஆடவன் இதற்கு முன் துப்பாக்கியை பயன்படுத்தி தனியாகவே பல்வேறு இடங்களில் கொள்ளையிட்டுள்ளான் . பினாங்கை சேர்ந்த அந்த நபர் நான்கு ஆயுதக் கொள்ளைகள் உட்பட 16 குற்றச் செயல்கள் பின்னணியையும் கொண்டுள்ளதாக காவ் கோக் சின் கூறினார்.