புதுடில்லி, ஜன 15 – புதுடில்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டதோடு திருக்குறளை உவமையாக தெரிவித்து தமது பொங்கல் வாழ்துக்களை தெரிவித்துக் கொண்டார். மத்திய தகவல்துறை இணையமைச்சரான எல். முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி வேட்டி, சட்டையான தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் கலந்து கொண்டார். அதோடு பொங்கல் பானையில் அவர் பொங்கலிட்டார். நமது ஒவ்வொரு பண்டிகைகளும் விவசாயிகளுடன் தொடர்பு உடையவை என்பதோடு தமிழ் பெண்கள் வீடுகளில் போடும் வண்ணக் கோலங்களில் பெரிய மகத்துவம் மறைந்துள்ளதாகவும் மோடி தமதுரையில் தெரிவித்தார். பல புள்ளிகள் இணைந்து கோலம் ஆகுவதுபோல் பல தரப்பினர் இணைந்தால்தான் நாடு அழகாகிறது என மோடி கூறினார்.
“தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு ”
என்ற திருக்குறளையும் மோடி மேற்கொள் காட்டியதோடு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என தமிழ் மொழியில் மோடி தெரிவித்தார்.