கோலாலம்பூர், நவம்பர் 24 – இவ்வாரம் தொடக்கத்திலிருந்து, நாட்டிலுள்ள ஐம்பதுக்கும் அதிகமான பள்ளிகளில் வெடிகுண்டு மருட்டல் விடுக்கப்பட்டதற்கு, பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியா கொண்டிருக்கும் நிலைப்பாடே காரணம் என கூறப்படுவதை, புக்கிட் அமான் நிராகரித்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதன் பின்னணியை கண்டறிய அரச மலேசிய போலீஸ் படை இன்னும் விசாரணை நடத்தி வருகிறது.
எனினும், அதற்கும் பாலஸ்தீன விவகாரத்திற்கும் தொடர்பு இல்லை என புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஸ்ரீ முஹமட் சுஹைலி முஹமட் ஜாயின் தெரிவித்தார்.
அதனால், அந்த மருட்டல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் அல்லது அதற்கான காரணத்தை கண்டறிய, FBI – அமெரிக்க உளவுத் துறையுடனும், Interpol – அனைத்துலக போலீசாருடனும் அரச மலேசிய போலீஸ் படை ஒத்துழைப்பை மேற்கொண்டு வருவதாக சுஹைலி சொன்னார்.
இதுவரை நாட்டிலுள்ள, ஒன்பது மாநிலங்களை சேர்ந்த 51 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மருட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், மிக அதிகமாக சிலாங்கூரிலுள்ள 18 பள்ளிகளுக்கு அந்த மருட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மருட்டல் அனைத்தும், மின்னஞ்சல் வாயிலாக, “Taktstorer” எனும் அனுப்புனரிடமிருந்து பெறப்பட்டுள்ளது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.