பஹாவ், மார்ச் 12 – பணியாளரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக நம்பப்படும் மருத்துவர் ஒருவருக்கு எதிராக, நெகிரி செம்பிலான், பஹாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 36 வயதான முஹமட் அமின் ரசாலி எனும் அந்த மருத்துவர் தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
25 வயது பெண்ணிடம், வன்செயலை பயன்படுத்தி ஆபாச சேட்டை புரிந்ததாக அந்த மருத்துவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19-ஆம் தேதி, இரவு மணி 10.30 வாக்கில், பண்டார் பாரு செர்த்திங்கிலுள்ள, தனது கிளினிக்கில் அவர் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள் வரையிலான சிறை அல்லது பிரம்படி அல்லது அபராதம் அல்லது அவற்றில் ஏதேனும் இரு தண்டனைகள் விதிக்கப்படலாம்.
ஐயாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் அம்மருத்துவர் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; ஏப்ரல் 29-ஆம் தேதி இவ்வழக்கு விசாரணை செவிமடுக்கப்படும்.