பெட்டாலிங் ஜெயா, மார்ச் 8 – சிலாங்கூர், ஷா ஆலாம் தொழிற்சாலையில் பணிபுரியும் 550 தொழிலாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை கண்டறிய உதவும் வகையில், குட்இயர் அரசாங்கத்துடன் இணைந்து அணுக்கமாக பணியாற்றி வருவதாக, மிடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் மாத்துடன் தொழிற்சாலையை மூடவுள்ள அந்த டயர் உற்பத்தி நிறுவனம், தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதற்காக, திறன் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்வதோடு, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சுடன் இணைந்து பணியாற்ற சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
அந்நடவடிக்கை, தொழிலாளர்களின் நலன் பேணும் குட்இயர் நிறுவனத்தின் கடப்பாடை புலப்படுத்துகிறது.
2017-ஆம் ஆண்டு முதல் நஷ்டத்தில் இயங்கி வருவதால் தான், உற்பத்தியில் இருந்து வணிக மாதிரிக்கு குட்இயரை மாறத் தூண்டியுள்ளதாக மிடா தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஷா ஆலாமிலுள்ள, குட்இயர் தொழிற்சாலை மூட என்ன காரணம் என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டுமென, முன்னாள் அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சர் ரபிடா அஜீஸ் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.