டிச 11 – பட்டப்படிப்பை தன் வசமாக்க, பார்வை குறைபாடு ஒரு தடையாகவே அமைந்தது அல்ல கூறுகிறார் அண்மையில் மலேசியா அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் இளங்கலை பட்டம் பெற்ற ரிஷான் பொன்ராஜ் சிவராஜ்.
தனது விடாமுயற்சி, சக வகுப்பு மாணவர்களின் உதவி குறிப்பாக பெற்றோர் இருவரின் ஊக்கத்தால்தான் இந்த சாதனை தன் வசமானதாக குறிப்பிட்டார் டெங்கிலைச் சேர்ந்த இவர்.
“பல்கலைக்கழகத்தில் எனது மேற்கல்வியைத் தொடர்ந்து எனது லட்சியத்தை எட்டாமல் இருக்க எனது இந்த பார்வை குறைப்பாட்டை என்றும் ஒரு காரணமாக நான் சொல்லியதில்லை’ என்று வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார் ரிஷான்.
ரிஷானின் தாயார் கலைவாணி துரைசாமி, தனது நான்கு குழந்தைகளில் இளையவரான இவரின் சாதனைகள் குறித்து மிகவும் பெருமைப்படுவதாகக் கூறுகிறார்.
ரிஷானின் தந்தை கடந்த 2021ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், தற்போது அவரின் தந்தை பக்கத்தில் இருந்தால், தனது படிப்பை முடித்த ரிஷானின் வெற்றியை நிச்சயம் பெருமையாக நினைத்திருப்பார் எனவும் கலைவாணி தெரிவித்தார்.
உடல்குறைபாடு போன்ற பிரச்சனைகள் எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், நாம் வெற்றிப்பெற வேண்டும் என மனோபாவம், தொடர் முயற்சி மற்றும் உழைப்பு இருந்தது என்றால் இயற்கையின் குறைப்பாட்டையும் மீறி நாம் சாதிக்க முடியும் என்பதற்கு ரிஷான் ஒரு சிறந்த உதாரணமாகும்.