கோலாலம்பூர், ஜனவரி 11 – தனது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளை சம்பந்தப்படுத்தி பேசியிருக்கும், பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாமின் செயலை எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
குறிப்பாக, மக்கள் தம் மீது சினமடையும் வகையில், பெர்சத்துவும், பாசும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக ங்கே குற்றம்சாட்டியிருப்பது, பொறுப்பற்ற ஒரு செயல் என, பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் சாடியுள்ளார்.
சமய விவகாரங்களில், வெளி தரப்பினர் தலையிடும் போது, யாருடைய தூண்டுதலும் இன்றி, முஸ்லீம்கள் சொந்தமாகவே எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
அதனால், இஸ்லாமிய சமய விவகாரங்களில், வெளித் தரப்பினர் தலையிட தேவையில்லை. மீறி தலையிட்டால், யாருடைய தூண்டுதலும் இன்றி முஸ்லீம்கள் சொந்தமாகவே எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என ஹம்சா சொன்னார்.
அதனால், வெறுமனே மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதை விடுத்து, ங்கே முதலில் தமது செயலுக்காக மன்னிப்புக் கோர வேண்டுமென, ஹம்சா ஓர் அறிக்கையின் வாயிலாக இன்று தெரிவித்தார்.
முன்னதாக, பெட்ரோல் குண்டுகளை வீசி தனது காரையும், வீட்டையும் சேதப்படுத்திய தரப்பினரை மன்னித்து விட்டதாக நேற்று ங்கே கூறியிருந்தார்.
அதோடு, அதற்கு தம்மை வெறுக்கும் அளவிற்கு மக்களை தூண்டிவிடும், பெர்சத்து, பாஸ் கட்சிகள் தான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.