பத்து மவுங், நவம்பர் 29 – பினாங்கு, பத்து மவுங்கில், கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடி வர்த்தக கட்டிடம் ஒன்றின் கூரை பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், மூவர் உயிரிந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
புதையூண்டதாக நம்பப்படும் இதர நால்வரை தேடும் பணிகள் இன்னும் தொடர்கின்றன.
அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், வங்காளதேச தொழிலாளர்கள் ஆவர்.
புதையுண்டவர்கள், மீட்பு பணியாளர்களின் உதவியோடு தேடப்பட்டு வருவதாக, பினாங்கு போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முஹமட் யுசோப் ஜான் முஹமட் தெரிவித்தார்.
நேற்றிரவு மணி 9.45 வாக்கில், கட்டடத்தின் கீழ் தளத்தில், வேலை செய்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது, கட்டுமானத்தில் இருந்த இரும்பு தடுப்புகளும், கான்கிரீட்டும் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
அந்த கட்டுமானத் தளத்தில் மொத்தம் 18 தொழிலாளர்கள் வேலை செய்து வரும் நிலையில், அவர்களில் ஒன்பது பேர் தொழுகைக்காக சென்றிருந்த போது அவ்விபத்து நிகழ்ந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.