ஜோர்ஜ் டவுன், நவம்பர் 16 – பினாங்கில், 51 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள கடத்தல் சிகிரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த நான்கு நாட்களாக, கடற்படை போலீசார் மேற்கொண்ட உளவு நடவடிக்கை வாயிலாக, அந்த மிகப் பெரிய கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
பினாங்கில், இவ்வாண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பறிமுதல் நடவடிக்கையாக அது கருதப்படுகிறது.
இம்மாதம் பத்தாம் தேதி, மாலை மணி ஆறு வாக்கில், தஞ்சோங் தோக்கோங்கிலுள்ள, கைவிடப்பட்ட இரட்டை மாடி வீட்டை சோதனையிட்ட போது, அங்கிருந்து 49 லட்சம் சிகிரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அச்சம்பவம் தொடர்பில், இதுவரை யாரும் கைதுச் செய்யப்படாத வேளை ; அவ்வீட்டின் உரிமையாளர் தேடப்பட்டு வருவதாக, பினாங்கு பிரிவு ஒன்றின் கடற்படை கொமாண்டோ அசிஸ்டன் கமிஸ்னர் சம்சோல் காசிம் தெரிவித்தார்.
அண்டை நாட்டிலிருந்து கடல்மார்க்கமாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக நம்பப்படும் அந்த சிகிரெட்டுகள், உள்நாட்டு சந்தையில் விநியோகிக்கப்படுவதற்கு முன் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.