ஜோர்ஜ் டவுன், டிசம்பர் 28 – பினாங்கில், தங்கத்தின் அசலை பரிசோதனை செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான, நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 815 ரிங்கிட் பணத்தை, தனது சொந்த RHB வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக, அந்நிறுவனத்தின் முன்னாள் மேலாளருக்கு எதிராக இன்று ஜோர்ஜ் டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 133 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும், 41 வயது தே யா லிங் எனும் அந்நபர், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும், 2021ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மேலாளராக பணிப்புரிந்த சமயத்தில், அவர் அக்குற்றங்களை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டிலிருந்து அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 500 ரிங்கிட் வீதம் மொத்தம் 66 ஆயிரத்து 500 ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. அதே சமயம், கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் கூடுதல் நிபந்தனையும் விதிக்கபட்டது.
இவ்வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி செவிமடுக்கப்படும்.