பட்டர்வொர்த், ஜனவரி 17 – கடந்தாண்டு டிசம்பரில், மது போதையில் காரை செலுத்தி, இரு ஆசிரியர்களுக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டை மறுத்து, 47 வயது தியோ ஜூ லியோங் எனும் ஆடவன் இன்று பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை கோரினான்.
அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாக மது பானத்தை அருந்தியதால், 31 வயது முஹமட் பக்ருல் ரொட்சி பெளசி மற்றும் 32 வயது முஹமட் ஹசான் முஹமட் அயுப் எனும் இரு ஆசிரியர்களுக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டை தியோ எதிர்நோக்கியுள்ளான்.
கடந்தாண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, அதிகாலை மணி 2.30 வாக்கில், செபராங் ஜெயா, ஜாலான் பெர்மாதாங் பாருவில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகளுக்கு குறையாத அல்லது 15 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கு குறையாத அல்லது ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கு மேற்போகாத அபராதமும் விதிக்கப்படலாம்.
எட்டாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் அவ்வாடவன் இன்று விடுவிக்கப்பட்டான்.
இவ்வழக்கு விசாரணை மார்ச் ஏழாம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, ஜாலான் பெர்மாதாங் பாருவில், சாலை விபத்தில் இரு ஆசிரியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விசாரணைக்காக ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக, பினாங்கு இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் சித்தி நோ சாலாவத்தி சையிட் கூறியிருந்தார்.
மது போதையில் அவ்வாடவன் செலுத்திய BMW கார், கட்டுப்பாட்டை இழந்து எதிர்சாலையில் நுழைந்தது, உயிழந்த ஆசிரியர்கள் பயணுத்த மைவி காரை மோதித் தள்ளியதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.