புக்கிட் மெர்தாஜாம், பிப்ரவரி 7 – பினாங்கு பாலத்தில், இதர ஓட்டுனர்களுக்கு ஆபத்தை விளைவித்ததால், குற்றவியல் அச்சுறுத்தல் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, மாற்றுதிறனாளிகளுக்கான பிரத்தியேக அட்டையை வைத்திருக்கும் பெண் ஒருவரும், அவரது கணவரும் நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
37 வயதான அப்பெண்ணையும், அவரது 50 வயது கணவரையும், இம்மாதம் பத்தாம் தேதி வரை, விசாரணைக்காக தடுத்து வைக்க, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
அவ்விருவருக்கும் எதிராக, குற்றவியல் சட்டத்தின் 506-வது பிரிவின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, பினாங்கு பாலத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த தம்பதி, இதர மோட்டார் சைக்கிளோட்டிகளை எட்டி உதைத்ததோடு, கயிற்றை கொண்டு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட காணொளி நேற்று வைரலானது.
அதனை தொடர்ந்து, நேற்று பிற்பகல் வாக்கில், கொம்டார் சுற்று வட்டாரப் பகுதியில், அவர்கள் கைதுச் செய்யப்பட்டதை, செபெராங் பெராய் தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஹெல்மிஸ் அரிஸ் உறுதிப்படுத்தி இருந்தார்.