பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 6 – மோட்டார் சைக்கிளில் செல்லும் தம்பதி, மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டியை எட்டி உதைத்து அடாவடியாக நடந்து கொள்ளும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
அண்மையில், பினாங்கு பாலத்தில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பான காணொளி, X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த ஒரு நிமிட காணொளியில், மாற்றுத்திறனாளிகளான அந்த தம்பதி, அவ்வழியே செல்லும் இதர மோட்டார் சைக்கிளோட்டிகளை, வேண்டும் என்றே எட்டி உதைத்து அடாவடியாக நடந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதோடு, கையில் கயிறு ஒன்றை வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட பெண், அதனை இதர மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் காரோட்டிகள் மீது வீசி, அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் காண முடிகிறது.
அதனால், அந்த காணொளி தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை முழு விசாரணை மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இணைய பயனர்கள் பலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.