ஜோர்ஜ் டவுன், பிப்ரவரி 12 – பினாங்கு, ஜெலுதோங்கிலுள்ள, “ஹோம்ஸ்டே” தங்கும் விடுதி குளியலறையில், இரகசிய கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில், ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
அந்த 20 வயது மதிக்கத்தக்க ஆடவன் நேற்று மாலை கோலாலம்பூரில் கைதுச் செய்யப்பட்டதாக, திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ACP ரஸ்லாம் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 24 வயது பெண் வழங்கிய புகாரை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவ்வாடவன் கைதுச் செய்யபட்டு விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் ரஸ்லாம் உறுதிப்படுத்தினார்.
அவ்வாடவன், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பன் என்பதும், இதர சில நண்பர்களுடன் அதே ஹோம்ஸ்டேவில் அவன் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, ஹோம்ஸ்டே தங்கும் விடுதி குளியல் அறையில், இரகசிய கண்காணிப்பு காமிரா கண்டுபிடிக்கப்பட்ட அச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி சமூக ஊடகங்களில் வைரலான வேளை ; சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு வருவதாக, போலீஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.