கோலாலம்பூர். நவ 16 – பிரதமர் அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கும்படி குறிப்பிட்ட தனிப்பட்ட நபர்கள் எவரும் பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நெருங்கவில்லையென அக்கட்சி இன்று உறுதிப்படுத்தியது. இதுவரை எந்தவொரு நபரும் இந்த விவகாரம் தொடர்பாக பாஸ் கட்சி நாடாளுமன்று உறுப்பினர்களை நெருங்கவோ அல்லது சந்தித்ததோ கிடையாது என அக்கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மாட் ஃபத்லி ஷாரி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இதுவரை எவராவது பாஸ் எம்.பி.க்களிடம் நெருங்கியிருக்கிறார்களா என செய்தியாளர்கள் வினவிய கேள்விக்கு பதில் அளித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
‘Datuk Botak’ எனப்படும் நபர் ஒருவர் இதற்கு முன் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அன்வாருக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் அந்த நபர் இப்போது பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தூண்டில் வீசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பெர்சத்துவின் இளைஞர் பிரிவு தலைவரான வான் அகமட் ஃபய்சல் இதற்கு முன் தெரிவித்திருந்தார்.