கோலாலம்பூர், பிப்ரவரி 28 – மக்களவையில் இன்று நேரம் குழப்பமான சூழல் நீடித்தது.
இம்முறை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிரட்டப்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அந்த குழப்பம் ஏற்பட்டது.
பெரிகாத்தான் நேஷனலை சேர்ந்த தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான், தம்மை தொலைப்பேசி வாயிலாக பலர் தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறினார்.
நாட்டின் 15-வது பொதுத் தேர்தல் முடிவடைந்ததும், தமக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதலில், ஜனவரி 17-ஆம் தேதி, தலைநகர் வெஸ்டின் தங்கும் விடுதியிலும், பின்னர் JW மேரியட் தங்கும் விடுதியிலும், ஆகக் கடைசியாக கடந்த திங்கட்கிழமை, ஜாலான் அம்பாங்கிலுள்ள, கோரஸ் தங்கும் விடுதியிலும் தம்மை சந்தித்த சிலர், பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு தம்மை மிரட்டியதாகவும், அதற்கு சன்மானமாக 17 லட்சம் ரிங்கிட் பணத்தை தருவதாக கூறியதாகவும் வான் சைபுல் சொன்னார்.
எனினும், அவரது குற்றச்சாட்டு, மக்களவையில் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
அது உண்மை என்றால், ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யுமாறு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், சவால் விடுத்தார்.
எனினும், அதற்கு தக்க ஆதாரம் தம்மிடன் இருப்பதாக சைபுல் பதிலளித்ததும் குறிப்பிடத்தக்கது.