கோலாலம்பூர், டிச 31 – பிரதமர் அன்வாரையும் அவரது ஒன்றுமை அரசாங்கத்தையும் கவிழ்க்க துபாயில் புதிய சதித்திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சமுக தொடர்புத்துறையின் துணை தலைமை இயக்குனர் டத்தோ இஸ்மாயில் யூசோப் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் ஐக்கிய அரபு சிற்றரசு தலைநகரில் தங்களது விடுமுறையின்போது அரசாங்கத்தின் குறிப்பிட்ட சில பிரதிநிதிகள் உட்பட பெரிக்காத்தான் நேசனல் தலைவர்கள் அந்த சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இஸ்மாயில் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிக்கு தாவக்கூடிய சாத்தியமான நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு லஞ்சம் வழங்கும் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவது குறித்து அந்த கூட்டம் நடைபெற்றதாக இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி தாவுவதை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கத்தில் இக்கூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் மடானி அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களை உடைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஆருடங்கள் வெளியாகின .
கடந்த இரண்டொரு நாளாக பெரிக்காத்தான் நேசனல் தலைவர்கள் விடுமுறைக்காக துபாயில் இருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவம் மற்றும் மடானி அரசாங்கம் மீது அதிருப்தி அடைந்துள்ள பிரிவினரைக் கொண்ட இதர சில தலைவர்களும் அந்த விடுமுறையில் கலந்துகொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.