கோலாலம்பூர், ஜன 15 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிர்வாகத்தின் சீரமைப்பு நடவடிக்கை மிகவும் மெத்தனமாக இருப்பது குறித்து பெர்சேவின் முன்னாள் தலைவர் டத்தோ அம்பிகை ஸ்ரீனிவாசன் ஏமாற்றம் தெரிவித்திருக்கிறார். சீரமைப்புகள் மெதுவாக நகர்கின்றன. லஞ்ச ஊழலை ஒழிப்பதில்தான் அன்வார் கவனம் செலுத்துவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான அம்பிகா கூறினார். சில சீரமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு சில கால அவகாசம் வழங்க வேண்டும் என தாம் நம்பிக்கை கொண்டிருந்தாலும் எதிர்காலத்தில் புதிய சீரமைப்புக்கான உண்மையான திட்டங்கள் எதனையும் தாம் கேள்விப்படவில்லை அல்லது பார்க்கவில்லயென அம்பிகா கூறினார்.
லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பது குறித்து அதிகாமாக பேசப்பட்டது. ஆனால் அந்த விவகாரத்தில் எந்தவொரு மாற்றங்களும் தெளிவாக எடுக்கப்படவில்லை. அடிப்படை மனித உரிமை குறிப்பாக பேச்சு சுதந்திரம் உட்பட பல்வேறு விவகாரங்களில் முன்னுரிமை காட்டப்படவில்லை என அம்பிகா தெரிவித்தார். நிந்தனை சட்டம் இன்னமும் இருப்பதோடு அது பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து நாங்கள் அதிர்ச்சியடைகிறோம். தொடர்பு மற்றும பல்லூடக சட்டத்தின் 233ஆவது விதியிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 1998ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233ஆவது விதி பிரச்சனைக்குரியது என்பதோடு அரசியல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகிறது என பலர் குரல் எழுப்பி வந்தாலும் இந்த விவகாரத்தில் எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படவில்லையென அம்பிகா சுட்டிக்காட்டினார். மேலும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவிக்கப்பட்ட MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைப்பு செய்வதில் அரசாங்கம் முழு கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டபோதிலும் எந்தவொரு முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும் அம்பிகா கூறினார்.