லண்டன், ஜன 3 – விரைவில், பயணிகள் பிரிட்டன் விமான நிலையங்களில், பாஸ்போர்ட்டுடன் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை எனும் நிலை உருவாகவுள்ளது.
முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம், விரைவாக மக்களை பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படை திட்டங்களைத் தீட்டி வருகின்றனர்.
அவசரமான சூழலில் பிரிட்டனுக்கு வருவோர் கூட, விமான நிலையங்களில் பாஸ்போர்ட் சோதனைக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேர்வதுண்டு. அதனால் ஏற்படும் தாமதம், பதற்றம் முதலான பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர பிரிட்டன் எல்லைப் பாதுகாப்புப் படை இந்த அம்சத்தை திட்டமிட்டு வருகிறது.
இந்த ஆண்டில், பிரிட்டன் விமான நிலையங்களில் அதற்கான சோதனை முயற்சிகள் தொடங்கவுள்ளன. விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘E-Gates’ எனப்படும் மின்னணு நுழைவாயில்கள், பயணிகளின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம், ஒருவரை பிரிட்டனுக்குள் அனுமதிப்பதா இல்லையா என இனி முடிவு செய்யவுள்ளது.