ஈப்போ, ஜனவரி 31 – விடுமுறைக்கு வந்த பிரிட்டிஷ் தம்பதியிடம், வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனத்தை செலுத்தியதாக கூறி, 100 ரிங்கிட்டை கையூட்டாக கேட்டு பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், மூன்று போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
37 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவரும், மாநில போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுத் துறையை சேர்ந்தவர்கள் என்பதை, பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி உறுதிப்படுத்தினார்.
அம்மூவரும், பிப்ரவரி முதலாம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளை ; குற்றவியல் சட்டம், ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் மற்றும் தொடர்பு பல்லூடக சட்டங்களின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அதே சமயம், நேரடியாக வந்து வாக்குமூலம் அளிக்க, சம்பந்தப்பட்ட பிரிட்டிஷ் தம்பதியும் அழைக்கப்பட்டுள்ளதாக யுஸ்ரி சொன்னார்.
முன்னதாக, போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர், பிரிட்டிஷ் தம்பதியிடம், நூறு ரிங்கிட்டை கையூட்டாக வாங்கும் காணொளி ஒன்று, இம்மாதம் 28-ஆம் தேதி தொடங்கி வைரலானது குறிப்பிடத்தக்கது.