
புத்ராஜெயா, ஜூன்-7-நாட்டில் உள்ள அனைத்து வணிக வளாகங்களிலும் பெரிய வணிக மையங்களிலும் மறுசுழற்சி மையங்களை அமைப்பது இனி கட்டாயமாக்கப்படும்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT அதனை அறிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பைகளின் அளவைக் குறைக்கவும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடக்கமாக, புதிய வணிக வளாக திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போதே இந்த மறுசுழற்சி மையங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் சேர்க்கப்பட வேண்டும் என அமைச்சர் Nga Kor Ming கூறினார்.
பொது மக்கள் தங்களின் வீடுகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை வணிக வளாகங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்து, அதற்குப் பதிலாகப் பணம் அல்லது _Trash-to-Cash_ புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த மையங்கள் செயல்படும் என்றார் அவர்.
தற்போதுள்ள வணிக வளாகங்களும் தங்களின் வாகன நிறுத்துமிடங்கள் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் இந்த மையங்களை அமைக்க அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பெறும் என அவர் சொன்னார்.
இப்புதிய விதிமுறை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.



