கோலாலம்பூர், ஜன 1 – இந்தியர் என்ற ஒரு குடையின் கீழ் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையோடு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் பெறுவோம் என்று இன்றைய 2024 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ம.இ.கா-வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
புத்தாண்டில் அனைத்து மக்களுக்கும் தமது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக விக்னேஸ்வரன் கூறினார். இந்தப் புத்தாண்டில் இந்தியச் சமுதாயம் உயரிய வாழ்வையும், வற்றாத வளங்களையும், நிறைவான நலன்களையும் பெறும் ஆண்டாக மலரட்டும்.
பொதுவாகவே, புத்தாண்டினை நாம் எப்போதுமே நம்பிக்கையுடன்தான் வரவேற்கிறோம். என்றாலும் கூட, சில நேரங்களில் இயற்கையின் சீற்றத்திற்கும் நாடும் – மக்களும் ஆளாக நேரிடுகின்றது.
இதுபோன்ற சிரமங்களை எதிர்நோக்கியுள்ள மக்கள் நம்மைச் சுற்றி இருப்பார்களேயானால், அவர்களின் துன்பங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயம் பல மாற்றங்களை சந்தித்து வந்தாலும், இந்தச் சவால்களையெல்லாம் எதிர்த்து நின்று போராடுவதற்கு நமக்கு துணிவும் – மனபலமும் வேண்டும்.
இந்த தடைக்கற்களை எல்லாம் கடந்து, நாம் சந்தித்து வந்த காயங்களுக்கு எல்லாம் மருந்தாக, மலரும் இந்தப் புத்தாண்டு ஒரு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறையருளை வேண்டி, நம்பிக்கையுடன் 2024-ஆம் ஆண்டினை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்று தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.