கோலாலம்பூர், நவம்பர் 16 – சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ், ஜாலான் பெர்சியரான் புத்ரா பாலத்திற்கு அடியில், கடந்த வெள்ளிக்கிழமை மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவியல் அம்சங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த எலும்புக்கூட்டை, செர்டாங் மருத்துவமனையின் நோயியல் நிபுணர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை ; அதில் குற்றவியல் கூறுகளுக்கு வித்திடும் வேறு எந்த காயமோ, தடையங்களோ இருப்பது அடையாளம் காணப்படவில்லை என, சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் ACP வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
அந்த எலும்புக்கூட்டில் நான்கு இடங்களில், எலும்பு முறிவு மட்டுமே அடையாளம் காணப்பட்டன.
உயிரிழந்தவர் தவறி விழுந்த போது, அந்த முறிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அஸ்லான் சொன்னார்.
அதனை தொடர்ந்து, எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அறிந்ததும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் போலீசார் நேரடியாக காண வந்ததையும் அஸ்லான் உறுதிப்படுத்தினார்.
கடந்த வெள்ளிகிழமை, நண்பகல் மணி 12.15 வாக்கில், புத்ரா ஹைட்ஸ் பாலத்திற்கு அடியில், எலும்புக்கூடொன்று கண்டெடுக்கப்பட்ட வேளை ; இந்தோனேசியாவை சேர்ந்த 40 வயது ரிக்கி மந்தகுனா எனும் நபருடைய எலும்புக்கூடு அதுவெனவும், அவர் மூன்று முதல் ஆறு வாரங்களுக்கு முன் உயிரிழந்திருக்க கூடுமெனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.