ஈப்போ , பிப் 22 – பேராவில் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழும் , ஈப்போ , புந்தோங் கம்போங் செக்கடியில் எழுந்தருளியுள்ள ஓம் ஸ்ரீ வீரமுத்து மகா காளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் முன்நிலைலையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கே. சதாசிவ குருக்கள் தலைமையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணியளவில் ஓம் ஸ்ரீ வீரமுத்து மகா காளியம்மன், ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பாலசுப்பிரமணியர் மற்றும் ஆலயத்தில் வீற்றிருக்கும் அனைத்து மூர்த்திகளுக்கும் புனரவர்த்தனை சுவர்ண பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 1980 ஆம் ஆண்டு அம்பாளின் நெற்றியில் இருந்து குங்குமம் அருவி போல் கொட்டிக்கொண்டிருந்த காட்சி உலகம் முழுவதிலும் பரவியது . கடந்த 1981 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்பாளுக்கு குங்குமாங்கி என்ற நாமமும் சூட்டப்பட்டது. இன்றைய கும்பாபிஷேக நிகழ்வுக்கு பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் , புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் எம். துளசி ஆகிய இருவரும் சிறப்பு வருகை புரிந்தனர். இவ்விழாவில் பேசிய சிவநேசன் மிகவும் சிறப்பான முறையில் செயல் பட்டு வரும் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்கு
80,000 ரிங்கிட் நிதி வழங்குவதாகவும் அறிவித்தார். மேலும் ஆலயங்கள் கட்டுவது முக்கியம் அல்ல. அதனை முறையாக பராமரிக்கவேண்டும். அதன் நிர்வாகத்தையும் சிறப்பாக நடத்தவேண்டும் என்றும் சிவநேசன் கேட்டுக்கொண்டார். நாட்டில் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுப் பயணிகள் வருகை தரும் ஆலயமாக விளங்கு ஓம் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் சகல வசதிகள் கொண்ட ஆலயமாக விளங்கி வருவதைம் காண முடிகிறது என்றார். இந்த நிகழ்வில் கும்பாபிஷேக சிறப்பு மலரையும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் வெளியீடு செய்தார். இதனிடைய இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வுக்கு நிதி உட்பட பல்வேறு வகையில் உதவியும் ஒத்துழைப்பையும் வழங்கிய அனைவருக்கும் ஆலயத் தலைவர் எஸ் . லட்சுமணன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.